அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்
அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரும், மூத்த புற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் வி சாந்தா இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
மருத்துவ சேவைக்காக அவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், மகசேசே விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளை அவர் வென்றுள்ளார். அவர் தனக்கு விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மேம்பாட்டிற்காகவே செலவு செய்தவர்.
டாக்டர் சாந்தா சுமார் ஆறுபது ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய் (Cancer) நிறுவனத்தில் ரெசிடெண்ட் மருத்துவ அதிகாரியாக சேர்ந்தார். அதன் பின்னர், புற்றுநோயியல் துறையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
பெண்கள் கல்வி கற்பது அவசியம் என்ற நம்பிக்கை கொண்ட ஒரு குடும்பத்தில் 1927 இல் சாந்தா பிறந்தார். அவர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 1949 இல் எம்.பி.பி.எஸ் முடித்து, மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் நிபுணத்துவம் பெற்றவர்.
1954 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதல் பெண் மருத்துவ பட்டதாரிகளில் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்ட அடயார் புற்றுநோய் நிறுவனத்தில் சாந்தா சேர்ந்தார். மருத்துவத்தில் தனது பி.ஜி-ஐ முடித்ததார். 1960 களில் டொராண்டோ மற்றும் இங்கிலாந்தில் (England) மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையிலும் அவர் பயிற்சி பெற்றார்.
1954 ஆம் ஆண்டில் 12 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட அடையார் கேன்சர் நிறுவனம், இப்போது 423 படுக்கைகள் கொண்டு நவீன வசதிகளுடன் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராய் பொறுப்பேற்ற டாக்டர் ஷாந்தா இங்கு பல நவீன வசதிகளைக் கொண்டு வந்தார். நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சைப் பெற்றனர்.
விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் டாக்டர் சாந்தவின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் மருத்துவ உயர் கல்வி பட்டமும் பெற்ற டாக்டர் சாந்தா அடையாறு மருத்துவமனையில் தனது மருத்துவ பணியை துவங்கினார்.
அடையாறு மருத்துவமனையை உலகத் தரம்வாய்ந்த, புகழ் பெற்ற புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் இவரது பங்கு அளப்பறியது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Labels: India